சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=EusYq6RgstU
1.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருத்தூங்கானைமாடம் - பழந்தக்கராகம் அருள்தரு கடந்தைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சுடர்க்கொழுந்தீசர் திருவடிகள் போற்றி
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
அடங்கும் இடம் கருதி நின்றீர் எல்லாம், அடிகள் அடி நிழல் கீழ் ஆள் ஆம் வண்ணம்,
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானைமாடம் தொழுமின்களே!
[ 1]
பிணி நீர சாதல், பிறத்தல், இவை பிரியப் பிரியாத பேர் இன்பத்தோடு
அணி நீர மேல் உலகம் எய்தல் உறில், அறிமின்! குறைவு இல்லை; ஆன் ஏறு உடை
மணி நீலகண்டம் உடைய பிரான் மலைமகளும் தானும் மகிழ்ந்து வாழும்
துணி நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 2]
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
ஆம் ஆறு அறியாது, அலமந்து, நீர் அயர்ந்தும் குறைவு இல்லை; ஆன் ஏறு உடைப்
பூ மாண் அலங்கல் இலங்கு கொன்றை புனல் பொதிந்த புன்சடையினான் உறையும்
தூ மாண் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 3]
ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று இவை உடைத்து ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
மான்று மனம் கருதி நின்றீர் எல்லாம், மனம் திரிந்து, மண்ணில் மயங்காது, நீர்
மூன்று மதில் எய்த மூவாச் சிலை முதல்வர்க்கு இடம்போலும் முகில் தோய் கொடி
தோன்றும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 4]
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை மரணத்தொடு ஒத்து அழியும் ஆறுஆதலால்,
வியல் தீர மேல் உலகம் எய்தல் உறின், மிக்கு ஒன்றும் வேண்டா; விமலன் இடம்
உயர் தீர ஓங்கிய நாமங்களால், ஓவாது நாளும் அடி பரவல்செய்
துயர் தீர்-கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 5]
Go to top
பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா, படர் நோக்கின் கண் பவளநிற
நன்நீர்மை குன்றி, திரைதோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன்,
பொன் நீர்மை துன்றப் புறம் தோன்றும் நல் புனல் பொதிந்த புன்சடையினான்உறையும்
தொல்-நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 6]
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி இழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
நிறை ஊண் நெறி கருதி நின்றீர் எல்லாம், நீள் கழலே நாளும் நினைமின்!சென்னிப்
பிறை, சூழ் அலங்கல் இலங்கு கொன்றை, பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 7]
பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில் வாடி, பழிப்பு ஆய வாழ்க்கை ஒழியத் தவம்
இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும்!
கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான், காதலியும் தானும் கருதி வாழும்,
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 8]
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழியத் தவம்
வாயும் மனம் கருதி நின்றீர் எல்லாம் மலர்மிசைய நான்முகனும், மண்ணும் விண்ணும்
தாய அடி அளந்தான், காணமாட்டாத் தலைவர்க்கு இடம்போலும் தண் சோலை விண்
தோயும் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 9]
பகடு ஊர்பசி நலிய, நோய் வருதலால், பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய, தவம்
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு துவர் ஆடையாரும் நாடிச் சொன்ன
திகழ் தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா; திருந்திழையும் தானும் பொருந்தி வாழும்
துகள் தீர் கடந்தைத் தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே!
[ 10]
Go to top
மண் ஆர் முழவு அதிரும் மாட வீதி வயல் காழி ஞானசம்பந்தன், நல்ல
பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை உரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்
கண் ஆர் கழல் பரவு பாடல் பத்தும் கருத்து உணரக் கற்றாரும் கேட்டாரும் போய்,
விண்ணோர் உலகத்து மேவி வாழும் விதி அதுவே ஆகும்; வினை மாயுமே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருத்தூங்கானைமாடம்
1.059
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,
Tune - பழந்தக்கராகம்
(திருத்தூங்கானைமாடம் சுடர்க்கொழுந்தீசர் கடந்தைநாயகியம்மை)
4.109
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொன் ஆர் திருவடிக்கு ஒன்று
Tune - திருவிருத்தம்
(திருத்தூங்கானைமாடம் மால்வணங்குமீசர் கருணைநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400